உள்ளூர் செய்திகள்
வாட்ஸ் அப்

தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் தான் என் சாவுக்கு காரணம்: வாட்ஸ்-அப் வீடியோவில் ராதாகிருஷ்ணன் கதறல்

Published On 2022-05-14 15:17 IST   |   Update On 2022-05-14 15:17:00 IST
ஈரோட்டில் லாட்டரி சீட்டில் பணத்தை இழந்த நூல் கமிஷன் ஏஜெண்ட் ராதாகிருஷ்ணன் தற்கொலைக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஈரோட்டில் லாட்டரி சீட்டில் ரூ.62 லட்சத்தை இழந்த நூல் கமிஷன் ஏஜெண்ட் ராதாகிருஷ்ணன் தற்கொலைக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கண்ணீருடன் பேசினார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்” நான் சாக காரணம் கருங்கல்பாளையம் கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில். லாட்டரி ஏஜென்சி அவர் தான் காரணம். இந்த லாட்டரியால் 62 லட்சத்தை இழந்து விட்டேன்.

அதனால் என்னால் தாங்க முடியல. நான் உயிரோடு இருந்தால் இன்னமும் லாட்டரி  போட்டுகிட்டே இருப்பேன். இதனால் நான் பைத்தியமாகி விடுவேன். அதனால் என் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக 30 லட்சம் செந்திலிடம் இருந்து வாங்கி கொடுக்க வேண்டும்.

இதற்கு உறவினர்கள், நண்பர்கள் எப்படியாவது உதவி செய்து பணத்தை வாங்கி கொடுத்து விடுங்கள். மாண்புமிகு அமைச்சர் அண்ணன் முத்துசாமி அவர்களுக்கு  நான் தற்கொலை செய்து கொள்வதற்கு என்னை மன்னித்து விடுங்கள். இதை சொல்வதற்கு எனக்கு கஷ்டமாக இருக்கிறது அண்ணா.

நீங்கள் தான் எப்படியாவது என் குடும்பத்துக்கு நஷ்டஈடு வாங்கி கொடுக்க வேண்டும். அதேபோல் என் பொண்ணு எம்.காம்.சி.ஏ. படித்து உள்ளார். அவருக்கு ஒரு அரசாங்க வேலை வாங்கி கொடுங்க அண்ணா இது தான் என் கடைசி ஆசை. இதை நிறைவேத்துங்க அண்ணா.

லாட்டரியை  ஒழிச்சிருங்கள் அண்ணா. எத்தனையோ குடும்பம் இதனால் ரொம்ப ரொம்ப பாதிச்சிருச்சி. அதுக்கு நடவடிக்கை  எடுக்கணும். இந்த மாதிரி ஒரு முடிவு எடுத்ததுக்கு என்னை எல்லாரும் மன்னிச்சிருங்க. அண்ணா நீங்களும் மன்னிருங்க அண்ணா என்னால தாங்க முடியல அண்ணா என்று அதில் பதிவிட்டு உள்ளார்.

வீடியோவில் ராதாகிருஷ்ணன் கூறிய கவுன்சிலர் கீதாஞ்சலி தி.மு.க.வை சேர்ந்தவர். இவரது கணவர்தான் செந்தில்.

Similar News