உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மின் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை

Published On 2022-05-14 15:14 IST   |   Update On 2022-05-14 15:14:00 IST
மின் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
பெரம்பலூர் :

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மின் வாரிய ஊழியர்கள் தாக்கப்படுவதை தடுத்திடவும், மின்விபத்தினை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் அகஸ்டின், செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் கண்ணன் ஆகியோர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், இயற்கை சீற்றம், 

பலத்த காற்று போன்ற காரணங்களால் ஏற்படும் மின் தடைகளுக்கு மின் வாரிய ஊழியர்கள் தாக்கப்படுவதும், மின்வாரிய ஊழியர்களை தகாத வார்த்தைகளால் தொலைபேசியில் அசிங்கமாக திட்டுவதும் போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் எசனை, வேப்பூர், அரியலூர் மாவட்டத்தில் டி.பழூர் மின் பிரிவுகளில் மின்வாரிய ஊழியர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். 

பணியாளர்களுக்கு பணி மேற்கொள்ள போதுமான கால அவகாசம் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை கையாலகூட போதுமான அவகாசம் தராமல் அவசர கதியில் வாய்மொழி உத்தரவு வழங்கப்படுவதால் மின் விபத்து அதிகரித்து வருகின்றது.

இது போன்ற பிரச்சனையில் உரிய அலுவலர்கள் தாமதமாகவே தலையீடு செய்கின்றனர். இதனால் ஊழியர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

எனவே மின் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர். மனுவினை பெற்றுக்கொண்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Similar News