உள்ளூர் செய்திகள்
சிபிசிஎல் நிறுவன நில எடுப்பு திட்டத்தால் பாதிப்பு
நாகையில் சிபிசிஎல் நிறுவன நில எடுப்பு திட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்து விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம்:
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல், நாகை மாவட்டம் நாகூர், பனங்குடி, முட்டம் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. இந்த ஆலை விரிவாக்கத்திற்காக, பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம், முட்டம் ஆகிய ஊராட்சிகளில் 622 ஏக்கர் நில எடுப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நில எடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அந்நிறுவனம் குறைந்த விலைக்கு நிலங்களை கையகப்படுத்துவதால் நில உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பால்பண்ணைச்சேரி பகுதியில் இருந்து நாகை மாவட்ட கலெக்டர் அலு வலகம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக வந்து விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய நில எடுப்பு சட்டம் 30/2013 படி தேசிய நெடுஞ்சாலை துறைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடியே 50 லட்சம் தொகையுடன் கூடுதலாக 30 சதவீதம் உயர்த்தி நிர்ணயித்து உத்தரவிட்ட பின்பு நிலம் எடுப்பு பணிகள் தொடங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர் சகிலாவிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
சிபிசிஎல் நிறுவனத்தை விரிவாக்கம் செய்து தனியாரிடம் தாரை வார்க்க போவதாக மத்திய அரசின் மீது விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.