உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

விபத்தில்லா மாவட்டமாக அரியலூரை மாற்றுவதே காவலர்களின் இலக்கு

Published On 2022-05-13 15:24 IST   |   Update On 2022-05-13 15:24:00 IST
விபத்தில்லா மாவட்டமாக அரியலூரை மாற்றுவதே காவலர்களின் இலக்கு என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
அரியலூர்:

விபத்தில்லா மாவட்டமாக அரியலூரை மாற்றுவதே காவலர்களின் இலக்கு  என்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

அரியலூர் மாவட்டத்தில் காவல் துறையினர் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி சிமென்ட் ஆலை கனரக வாகனங்கள் மற்றும் மற்ற கனரக வாகனங்களும் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே நகர்ப்புறம் ஊரக சாலைகளில் இயக்க அனுமதிக்கப்படுகின்றன.

சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத, வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாதங்களில் மாவட்டத்தில் மொத்தம் 210 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

அதில், கனரக வாகனங்களால் ஏற்பட்ட 29 விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இரு சக்கர வாகனங்களால் ஏற்பட்ட 112 விபத்துகளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து, கார் மற்றும் இதர வாகனங்களால் ஏற்பட்ட 69 விபத்துகளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து ஏற்படுத்தியவர் மீதும், வாகனத்தின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலான விபத்துகள் அதிவேகம், அஜாக்கிரதை மற்றும் மது போதையில் பயணம் செய்வதால் நடைபெற்று உள்ளன.

மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்தில் தான் அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. சிமென்ட் ஆலை கனரக வாகனங்களால் தான் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன என்ற பதிவுகள் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படுகின்றன. 

இது உண்மைக்கு புறம்பான செய்தியாகும். போக்குவரத்து விதிமுறைகளை மீறும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரியலூரை விபத்தில்லா மாவட்டமாக மாற்றும் கனவை இலக்காகக் கொண்டு முழுவீச்சில் காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

Similar News