உள்ளூர் செய்திகள்
பர்கூர் கிழக்கு மலைப்பகுதிக்கு சரிவர பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் அவதி
தாமரைகரையிலிருந்து மடம் வரை செல்லும் சாலையில் மழை காலங்களில் சேறும் சகதியும் ஏற்படுவதால் அரசு பஸ் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த பர்கூர்தாமரைக் கரையிலிருந்து மேற்கு மலை, கிழக்கு மலை என 2 பிரிவுகளாக உள்ளது.
தாமரைக்கரைலிருந்து கிழக்கு மலை பகுதிகளான தேவர்மலை, ஈரட்டி மடம் உள்ளிட்ட 12 கிராம பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் தரைப்பாலம் உள்ளது.
இந்த தரைப்பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் வருவதால் நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.
இதனை புதுப்பித்து கட்டித்தர வேண்டும் என்று அரசுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 2 மாதங்களாக இந்த பணி மந்தமாக நடைபெறுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனால் தாமரைகரையிலிருந்து மடம் வரை செல்லும் சாலையில் மழை காலங்களில் சேறும் சகதியும் ஏற்படுவதால் அரசு பஸ் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே உடனடியாக பாலம் வேலையை தொடங்கி விரைந்து முடிக்க அந்த பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.