உள்ளூர் செய்திகள்
குடும்ப தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மூக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் குமரேசன் (வயது 47). விவசாயி. இவரது குடும்பத்தில் சொத்து பிரச்சனை நீண்ட நாட்களாகவே இருப்பதாக தெரிகிறது. இதனால் குமரேசன் தினந்தோறும் மது அருந்திவிட்டு குடும்பத்தில் தகராறு செய்வாராம்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் நடந்த தகராறில் குமரேசனை அவரது குடும்பத்தார் அடித்து கீழே தள்ளியதாக கூறுகின்றனர். இதில் மயங்கி கிடந்த குமரேசனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு புதுகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குமரேசன் இறந்துவிட்டதாக கூறினர்.
இது குறித்து வந்த புகாரின் பேரில் டிஎஸ்பி வடிவேல், ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து சம்பட்டி விடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.