உள்ளூர் செய்திகள்
கைது

கொடுமுடி அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Published On 2022-05-12 06:01 GMT   |   Update On 2022-05-12 06:01 GMT
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த பாசூர் அருகே உள்ள பனங்காட்டு புதூர் பகுதியில் கூலித்தொழிலாளி குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு 17 வயதில் ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

இவரது மகள் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென வாந்தி எடுத்துள்ளார். அப்போது அவரது பெற்றோர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்தபோது மாணவி மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டார்.

இதுகுறித்து அவரது தாயார் கேட்ட போது மாணவி தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதைக்கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து விசாரித்தபோது அதே ஊரை சேர்ந்த இவரது உறவினர் மகனான தாமோதரன் (வயது 22) என்பவர் கொரோனா காலகட்டத்தில் கடந்த ஆண்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மாணவியிடம் பழகி உள்ளார்.

மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்றதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாமோதரன் அடிக்கடி மாணவி வீட்டுக்கு வந்து அவருடன் நெருங்கி பழகி திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாகவே மாணவி கர்ப்பமானது தெரிய வந்தது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர்.
Tags:    

Similar News