உள்ளூர் செய்திகள்
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கல்லூரி மாணவன் பலி
சீர்காழி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கல்லூரி மாணவன் உயிரிழந்தான்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தை இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் அபிமணி (21). இவர் சீர்காழியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
இதனிடையே அபிமணி அப்பகுதியில் உள்ள வயல் வழியாக சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக அறுந்த கிடந்த மின்கம்பியை மிதித்ததில் அபிமணி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கிடந்துள்ளார்.
நீண்ட மணி நேரத்திற்கு பிறகே அவ்வழியாக சென்றவர்கள் மின்சாரம் தாக்கி கிடந்த அபிமணியை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு 108 வாகனம் மூலம் அழைத்து சென்றனர். அபிமணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சீர்காழி போலீசார் வழக்குபதிவு செய்து உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
மின் வாரிய அதிகாரிகள் விஸ்வநாதன், முத்துக்குமார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் மின்விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இச்சம்பவம் தில்லைவிடங்கன் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.