கூடுதல் விலைக்கு விற்க சாக்கு மூட்டையில் 98 மது பாட்டில்களை பதுக்கிய 2 பேர் கைது
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கருங்கல்பாளையம் அடுத்த கிருஷ்ணம்பாளையம் மின்வாரியம் அலுவலகம் அருகே 2 பேர் சந்தேகப்படும்படியாக சாக்கு மூட்டைகளை கையில் வைத்து நின்று கொண்டிருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் (57), சக்திவேல்(36) என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை திறந்து சோதனை செய்தபோது அதில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
கூடுதல் விலைக்கு விற்பதற்காக மதுபாட்டில்களை சாக்கு மூட்டையில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சாக்கு மூட்டையில் இருந்த 98 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.13 ஆயிரம் இருக்கும்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.