உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும்- கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2022-05-10 15:21 IST   |   Update On 2022-05-10 15:21:00 IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

வாரம் தோறும் நடைபெறும் இக்கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறைகளில் மற்ற துறைகளில் இருந்து கிடைக்க வேண்டிய அனுமதிகள், பிரச்சனைகளை தீர்வு காண்பது குறித்து கலந்து ஆலோசித்து கொள்ள இக்கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாவட்ட நிலை அலுவலர்கள் கண்டிப்பாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதை அடுத்தவாரம் முதல் உதவி செய்ய வேண்டும். 3 மாவட்டங்களுக்கும் இணைந்து மாவட்ட நிலை அலுவலர் வேலூர் இருந்தால் அவர் மாதத்திற்கு ஒரு முறையாவது கட்டாயமாக பங்கேற்க வேண்டும்.இதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அவர்களுக்கு தெரிவித்து கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும் மாவட்ட நிலை அலுவலர்கள் கட்டாயமாக அவர்களுக்கு கீழ் உள்ளவர்களை இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க கூடாது. மாவட்ட நிலை அலுவலர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

பல்வேறு துறைகளில் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதனை தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் நீதிமன்ற வழக்குகள் அனைத்து துறைகளும் அறிக்கை அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அடுத்த வாரம் முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். 

நீதிமன்ற வழக்குகளை விரைவாக முடித்தால் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆளுமை துறை சார்ந்த அலுவலர்கள் நீதிமன்ற வழக்குகளை நிலுவையில் வைத்துள்ளதை வாரம்தோறும் அறிக்கை சமர்ப்பித்து, அதற்கான மேல் நடவடிக்கை குறித்து தெரிவிக்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள், குழந்தை திருமணங்கள் தடுத்தல் இவற்றைக் கண்காணிக்க சம்பந்தப்பட்ட துறைகள் அப்பகுதிகளில் சென்று ஆய்வு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். 

அதற்கான குழு கூட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு குழந்தை திருமணங்கள் நடப்பதை தவிர்க்கவும், அதேபோன்று பள்ளி செல்லா குழந்தைகள் எவ்வளவு என்பதை கணக்கெடுத்து அதற்கு பின்னர் எடுத்த நடவடிக்கை விவரம் கணக்கெடுக்க வேண்டும். இதனை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் பிரச்சினைகள் குறையும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் பல்வேறு துறைகளில் உள்ள பிரச்சனைகளை மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News