உள்ளூர் செய்திகள்
நெட்டப்பாக்கத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் மெயின் ரோட்டில் வயல்வெளிக்கு செல்லும் பாதையில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படு வதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது அங்கு சந்தேக ப்படும் படியாக நின்ற வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது சட்டைப்பையில் சோதனை நடத்திய போது சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் நெட்டப்பாக்கம் அருகே அந்தராசிக்குப்பம் பகுதியை சேர்ந்த பாலு (வயது 21) என்பதும் இவர் ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலைபார்த்து அந்த வேலையை கைவிட்டு பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து பாலுவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 56 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் செல்போல் பறிமுதல் செய்யப்பட்டது.