உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பீர் பாட்டிலால் தாக்கி கொள்ளை

Published On 2022-05-10 09:15 GMT   |   Update On 2022-05-10 09:15 GMT
சாப்ட்வேர் கம்பெனி ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கி லேப்டாப் மற்றும் செல்போன் கொள்ளையடித்துச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
புதுச்சேரி:

திருவாரூர் மாவட்டம் அரித்துவார மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன். இவர் புதுவை காமராஜர் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த ஒரு மாதமாக தங்கி புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

வேலை முடிந்து கண்ணையன் விடுதி அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அதேவிடுதியில் 3-வது மாடியில் தங்கி இருந்த 4 பேர் கண்ணையன் தங்கி இருந்த அறை கதவை தட்டினார்கள். 

உடனே கண்ணையன் அறை கதவை திறந்து பார்த்தார். அப்போது அவர்கள் கையில் வைத்து இருந்த பீர் பாட்டிலால் ஓங்கி கண்ணையனை திடீரென தாக்கினார். அவர் என்ன காரணத்திற்காக அடிக்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டார். ஆனால் மீண்டும் அவர்கள் பீர் பாட்டிலால் கண்ணையனை தலை மற்றும் கையில் சரமாரியாக குத்தினார்கள்.

மேலும் அத்துமீறி அறைக்குள் நுழைந்து அங்கு கண்ணையன் வைத்து இருந்த லேப்டாப், மற்றும் விலை உயர்ந்த செல்போன், மனிபர்ஸ் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். 

இந்த தாக்குதலில் காயமடைந்த கண்ணையன் விடுதி ஊழியர் உதவியுடன் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விடுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து சாப்ட்வேர் கம்பெனி ஊழியரை தாக்கி லேப்டாப், செல்போன் மற்றும் மனிபர்சை  கொள்ளை அடித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் விடுதியில் தங்கும் போது அவர்கள் மதுராந்தகத்தை சேர்ந்த அசாருதின் (21) மற்றும் மணி (22) என முகவரி கொடுத்து உள்ளனர். இந்த முகவரியை வைத்து போலீசார் அவர்களை பிடிக்க மதுராந்தகம் விரைந்துள்ளனர்.
Tags:    

Similar News