உள்ளூர் செய்திகள்
கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை
ஆப்பக்கூடல் அருகே கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அருகே கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆப்பக்கூடல் அருகே ஒரிச்சேரிப்புதூர் பகுதியில் ஓங்காளியம்மன் கோவில் உள்ளது.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கோவில் திறக்க சென்ற பூசாரி கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கோவில் நிர்வாகிகள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
இதற்கிடையே அதே பகுதியில் உள்ள சின்ன ஓங்காளியம்மன் கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு உள்ளது. 2 கோவில் உண்டியலில் ரூ.1 லட்சம் காணிக்கை இருக்ககூடும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும் ஒரிச்சேரி பகுதியில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள பத்தரகாளியம்மன் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலில் கொள்ளை முயற்சியும் நிகழ்ந்துள்ளது.
அடுத்தடுத்து 3 கோவில்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓரே கிராமத்தில் அடுத்தடுத்து 3 கோவில்களில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்து இருப்பது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமிரா இல்லாததால் கொள்ளை சம்பவத்தில் துப்பு துலக்குவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது.
அதே சமயம் விரல்ரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரிக்க தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.