உள்ளூர் செய்திகள்
ஜிப்மரில் இந்தி திணிப்பு-வைத்திலிங்கம் எம்.பி. அறிக்கை
ஜிப்மரில் இந்தி திணிப்பு-வைத்திலிங்கம் எம்.பி. அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி:
வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் கீழ் இருந்தால் சிகிச்சை உலகத்தரத்தில் கிடைக்கும் என்பதற்காக புதுவையில் ஜிப்மர் மருத்துவமனை தொடங்கப்பட்டது. அதன்படி ஜிப்மரில் தரமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தது.
அதில் புதுவை மக்களும் பயன் பெற்று வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஜிப்மரில் சிகிச்சைக்கு செல்லும் புதுவை மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தற்போது மத்திய அரசின் இந்தி திணிக்கும் பணியை ஜிப்மர் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஜிப்மர் மருத்துவமனை தரமான சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் இருந்து விலகி இந்தி திணிக்கும் பணியை கையில் எடுத்துக் கொண்டுள்ளது.
மேலும் வரும்காலங்களில் ஜிப்மர் பணிக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பதை கட்டா யத்திற்குள்ளாக்கி இந்தி மொழி மாநிலத்தவர்களை மட்டுமே ஜிப்மர் மருத்துவமனையில் கொண்டுவர மத்திய அரசும், ஜிப்மர் நிர்வாகமும் முயற்சித்து வருவதாக தெரிகிறது.
அவ்வாறு உள்ளூர் மக்களை புறக்கணித்து வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் பணியில் அமர்த்தினால் அது கலவரத்திற்கும், மோதலுக்குமே வழி வகுக்கும்.
எனவே, ஜிப்மர் நிர்வாகம் உடனடியாக எதிர்காலத்தில் அலுவலக மொழியாக இந்தி மற்றுமே என்ற சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் இந்தி திணிப்புக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்கள் அனைத்திற்கும் ஜிப்மர் நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும்.
குறிப்பாக ஜிப்மர் நிர்வாகத்தில் இருப்பவர்கள் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பதே நமது முதன்மையான நோக்கம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வர வேண்டும்.
மேலும் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி., என்ற முறையில் நான் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.