உள்ளூர் செய்திகள்
நெல்லித்தோப்பில் மனைவியுடன் தகராறில் தொழிலாளி தூக்கு போட்டு இறந்து போனார்.
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு கண்ணாரவீதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 41). கம்பி பிட்டர். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் சூரியா மோட்டார் சைக்கிள் மெக்கானிகாக வேலைபார்த்து வருகிறார்.
இதற்கிடையே சங்கரின் பெரியம்மா சங்கரின் மனைவி சாந்தியிடம் 4 பவுன் நகையை கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த நகையை பல ஆண்டுகள் ஆகியும் திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது சங்கர் இனிமேல் இது போன்று நகையை திருப்பி வாங்குமாறு தகராறு செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார். குடும்பத்தினர் சங்கர் விளையாட்டாக கூறி மிரட்டுவதாக எண்ணி இதனை கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் சாந்தி வெளியே சென்றிருந்தார். அவரது மகள் தேவாலயத்துக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்த சங்கர் திடீரென தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து படுக்கையறையில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.
தேவாலத்துக்கு சென்று வீடு திரும்பிய அவரது மகள் சுஜித்ரா தந்தை தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தனது தாய் மற்றும் அண்ணன் சூரியாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து சங்கரை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் சங்கர் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து அவரது மகன் சூரியா கொடுத்த புகாரின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.