உள்ளூர் செய்திகள்
சூறாவளி காற்றில் பத்ரகாளியம்மன் கோவில் தேர் பாதுகாப்பு நிழற்கூடம் சேதம்
சூறாவளி காற்றில் பத்ரகாளியம்மன் கோவில் தேர் பாதுகாப்பு நிழற்கூடம் விரிசல் ஏற்பட்டு சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.
அந்தியூர்:
சூறாவளி காற்றில் பத்ரகாளியம்மன் கோவில் தேர் பாதுகாப்பு நிழற்கூடம் விரிசல் ஏற்பட்டு சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் மற்றும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
பண்டிகை முடிவடைந்தவுடன் அந்த தேர் வெயில், மழையில் நனையாமல் பாதுகாக்க தேரின் முழு உயரத்திற்கு பாதுகாப்பு நிழற்கூடம் அமைக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீசிய சூறாவளி காற்றில் அந்த பாதுகாப்பு நிழற்கூடம் விரிசல் ஏற்பட்டு சாய்ந்த நிலையில் இருந்தது.
இதனை அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பத்திரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரவணனிடம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தகவல் தெரிவித்தார்.
அவரது அறிவுறுத்தலின் பேரில் அந்த பாதுகாப்பு நிழற்கூடத்தை பிரித்து மீண்டும் புதிதாக கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் இருந்த தேரினை மாற்று இடத்தில் நிறுத்தி தற்காலிக கூடாரம் அமைத்து வெயில் மழையில் பழுதாகாமல் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இந்த பணிகளும் தற்சமயம் நடைபெற்று வருகிறது.