உள்ளூர் செய்திகள்
நகை பறிப்பு

சித்தோடு அருகே இன்று காலை மளிகை கடையை திறக்க சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2022-05-09 06:11 GMT   |   Update On 2022-05-09 06:11 GMT
சித்தோடு அருகே மளிகை கடையை திறக்க சென்ற பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சித்தோடு:

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் ஆட்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெபதுரை. இவரது மனைவி மங்கள வள்ளி (48). இவர்கள் ஆட்டையம்பாளையம் தெற்கு வீதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

இன்று காலை சுமார் 6.15 மணி அளவில் மளிகை கடையை திறக்க மங்கள வள்ளி சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென மங்களவள்ளி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றனர்.

அப்போது சுதாரித்துக்கொண்ட மங்கள வள்ளி கையில் இறுக்கமாக செயினை பிடித்துக்கொண்டார். இந்நிலையில் அவரை தாக்கி விட்டு 2 பவுன் தங்க நகையுடன் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

இதனைத் தொடர்ந்து மங்களவள்ளி சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News