பவானிசாகர் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இளம்பெண் பலி
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர் அரசு அலுவலர் பயிற்சி பள்ளியில் தோட்ட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இந்துமதி (36). இவர்களுக்கு கருநாதன் என்ற ஒரு மகன் உள்ளார்.
சம்பவத்தன்று இந்துமதி தனது மகனுடன் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை இந்துமதியின் மீது இடிந்து விழுந்தது.
இதில் அவருக்கு இடதுபக்க கழுத்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக இந்துமதியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.