உள்ளூர் செய்திகள்
தாளவாடியில் தடுப்பணைகள் நிரம்பியது
தாளவாடியில் தொடர் மழையால் 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது.
தாளவாடி:
தாளவாடியில் தொடர் மழையால் 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது.
தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வருவதும், மாலை நேரத்தில் அவ்வப்போது மழையும் பெய்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை தலமலை, கோடிபுரம் நெய்தாளபுரம், ஒசூர், சிக்கள்ளி, பனக்கள்ளி, கெட்டவாடி ஆசனூர், குளியாடா, திகனாரை ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது.
வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள குளம் குட்டைகள் நிரம்பி உள்ளது. பலத்த மழையால் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நின்றது. தாளவாடி, திகனாரை மற்றும் சூசைபுரம் அருகே உள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழையால் 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. மழை நீர் அணைத்தும் வீணாக கர்நாடகா மாநிலம் சிக்கொலா அணைக்கு செல்கிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கூடுதல் தடுப்பணைகள் கட்டி மழை நீரை சேமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.