உள்ளூர் செய்திகள்
தற்கொலை

கோபிசெட்டிபாளையம் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-05-07 05:01 GMT   |   Update On 2022-05-07 05:01 GMT
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தந்தைக்கு ஏற்பட்ட விபத்து மற்றும் வயிற்றுவலி காரணமாக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கொளப்பலூர் அருகே உள்ள வரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி தவமணி. இவர்களுக்கு தட்சின் என்ற மகனும், கோதைநாயகி என்கிற விவிதா (20) என்ற மகளும் உள்ளனர்.

கோதைநாயகி அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பச்சையப்பன் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அப்போது முதல் கோதைநாயகி தான் தனது தந்தையை உடனிருந்து கவனித்து வந்தார். தனது அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டு விட்டதே என மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் கோதைநாயகிக்கு அடிக்கடி வயிற்று வலியும் இருந்து வந்தது. இதற்காக அவர் மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை தவமணி தனது மகன் தட்சனுடன் தோட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். வீட்டின் குளியலறையில் இருந்து தண்ணீர் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. தவமணி மகள் குளித்துக்கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் தண்ணீர் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் கதவை தட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. அவரது மகன் தட்சன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கோதைநாயகி தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரைக் கீழே இறக்கி வைத்து ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கோதைநாயகி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் தந்தைக்கு ஏற்பட்ட விபத்து மற்றும் வயிற்றுவலி காரணமாக கோதைநாயகி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
Tags:    

Similar News