உள்ளூர் செய்திகள்
மாயமான அந்தோணி சார்லஸ்.

செல்போனில் மனைவிக்கு தகவல் அனுப்பிவிட்டு மாயமான வாலிபர்

Published On 2022-05-04 14:49 IST   |   Update On 2022-05-04 14:49:00 IST
ஆன்லைன் வர்த்தகத்தால் கடன் தொல்லை செல்போனில் மனைவிக்கு தகவல் அனுப்பிவிட்டு மாயமான வாலிபர் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்மாபேட்டை:

ஆன்லைன் வர்த்தகத்தால் கடன் தொல்லை செல்போனில் மனைவிக்கு தகவல் அனுப்பிவிட்டு மாயமான வாலிபர் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்மாபேட்டை அருகே உள்ள சின்னபள்ளம், மேல் வீதியை சேர்ந்தவர் ரோஸ்லின் ஜெனிபர் (25). இவரது கணவர் அந்தோணி சார்லஸ் (31). இவர்கள் இருவருக்கும் கடந்த 2019-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

அந்தோணி சார்லஸ் தனது குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார். கடந்த 2021-ல் வேலை விஷயமாக சென்னை செல்வதாக கூறிவிட்டுச் சென்ற அந்தோணி சார்லஸ் சில நாட்களுக்குப் பிறகு தனது மனைவியை தொடர்பு கொண்டு செல்போனில் பேசியுள்ளார். 

அப்போது எனக்கு ஆன்லைன் வர்த்தக கடன் ரூ 4.1/2லட்சம் உள்ளது. என்னால் சமாளிக்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். என்னை தேட வேண்டாம் எனக் கூறியுள்ளார். 

உடனே ரோஸ்லின் ஜெனிபர் தனது கணவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு வந்த பின்னர் கடனை அடைத்துவிடலாம் எனக்கூறி தனது கணவரை வரவழைத்துள்ளார். அதன்பின் தான் அணிந்திருந்த நகைகளை விற்று கடன்களை அடைத்ததனர்.

பிறகு அந்தோணி சார்லஸ் தனது மனைவி வீட்டிலேயே தங்கி ஈரோடு அருகே உள்ள பெருமாள் மலை பகுதியில் செயல்படும் காட்டன் மில் ஒன்றில் கிராபிக் டிசைனராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 25-ந் தேதி காலை பணிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மேலும் அன்று இரவு ரோஸ்லின் ஜெனிபர் செல்போனுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

 அதில் தான் வாங்கிய கடன்கள் இன்னும் முடியவில்லை என்றும் கேரளா பக்கம் செல்வதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

அதன்பின்னர் ரோஸ்லின் ஜெனிபர் தனது கணவருக்கு போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது, தொடர்ந்து அவரைப் பற்றி உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு ரோஸ்லின் ஜெனிபர் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News