தெங்குமரஹடா அருகே கோவில் விழாவில் குண்டம் இறங்க வரிசையில் நின்ற வாலிபர் திடீர் மரணம்
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த காளிதிம்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (38), இவரது மனைவி சரஸ்வதி (30), இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று கார்த்திக் தனது மனைவி மற்றும் மகள்களுடன் பவானி சாகர் அடுத்த தெங்குமரஹடா அருகே உள்ள தொட்ட கொம்பை மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவுக்கு வந்தார்.
பின்னர் காலை 7 மணியளவில் கார்த்திக் குண்டம் இறங்குவதற்காக வரிசையில் நின்றார். அப்போது அவர் தனது மனைவியிடம் திடீரென தனக்கு நெஞ்சு எரிச்சல் இருப்பதாகவும், பதட்டமாகவும், முச்சுவிட சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சரஸ்வதி தனது கணவர் கார்த்திக்கை மீட்டு கோவில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். அப்போது கார்த்திக்கை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.