உள்ளூர் செய்திகள்
ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விற்பனை நடந்த போது எடுத்த படம்.

தக்காளி விலை கிடுகிடு உயர்வு

Published On 2022-05-01 15:10 IST   |   Update On 2022-05-01 15:10:00 IST
ஈரோடு மாவட்டத்தில் வரத்து குறைவு எதிரொலி காரணமாக தக்காளி விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் வரத்து குறைவு எதிரொலி காரணமாக தக்காளி விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் தினமும் ஈரோடு மாவட்டம் தாளவாடி, சத்தியமங்கலம், தாராபுரம், பழனி, திருப்பூர், கிருஷ்ணகிரி, கேரளா போன்ற பகுதியில் இருந்து 10 முதல் 15 டன் வரை தக்காளிகள் வரத்தாகி வந்தன.

கடந்த மார்ச் மாதம் தக்காளி விளைச்சல் நன்றாக இருந்ததால் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் குறைந்தது. 

இதன் காரணமாக மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைய தொடங்கியது. தக்காளி வரத்து குறையத் தொடங்கியதால் தக்காளி விலை கிடுகிடுவென உயர தொடங்கியது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தக்காளிகளை பயிரிடவில்லை. இதன் காரணமாகவும் தக்காளி வரத்து குறைய தொடங்கியது.

ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தற்போது 4 முதல் 5 டன் தக்காளி மட்டுமே வரத்தாகி வருகிறது. இதன் காரணமாக தக்காளி விலை கிலோவுக்கு தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களாக ஒரு கிலோ தக்காளி ரூ. 50-க்கு  விற்கப்பட்டு வந்தது. இன்று ரூ.20 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ தக்காளி சில்லரை விலையில் ரூ.70-க்கு விற்பனையானது. 

இதனால் இன்று தக்காளி வாங்க வந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இன்று கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து மட்டும் தக்காளிகள் வந்தன. இன்னும் சில நாட்கள் தக்காளி விலை அதிகமாகத்தான் இருக்கும் என்று வியாபாரிகள் கூறினர்.

Similar News