உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் முறைகேடு நடந்த அரசு மாணவர் விடுதி பட்டியல் தயார் - கலெக்டர் முருகேஷ் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் முறைகேடு நடந்த அரசு மாணவர் விடுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் கீழ் 102 அரசு மாணவர்கள், மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதிகள் முறையாக செயல்படவில்லை எனவும் போலியான வருகைப்பதிவேடு களை வைத்து முறைகேடுகள் செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அதனால் விடுதிகளில் வார்டன்கள் முறையாக தங்குகின்றனரா, மாணவர்கள் விடுதியில் தங்குகின்றனரா, விடுதிகள் பாதுகாப்பான முறையில் உள்ளதா போன்றவை குறித்து கடந்த 25-ந்தேதி மாலையில் மாவட்ட கலெக்டர் முருகேஷ் மட்டுமின்றி உயர் அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு விடுதியிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறை, உணவு பொருட்கள் இருப்பு விவரம், வருகை பதிவேடு, மாணவர்களின் எண்ணிக்கை, கல்வித்தரம், கழிவறை வசதி உள்ளதா, குடிநீர் வசதி உள்ளதா போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் பல விடுதிகளில் மாணவர்கள் இல்லாததும், மாணவர்கள் இருந்தும் வார்டன் இல்லாததும், வளாகம் தூய்மையாக இல்லாமலும் இருந்தது தெரியவந்தது.
மேலும் சில விடுதிகளில் வருகை பதிவேடுகள் முறையாக வைக்கப்படாமலும் உள்ளிட்ட முறைகேடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து கலெக்டர் முருகேஷிடம் கேட்ட போது, முறைகேடுகள் நடைபெற்ற விடுதிகள் குறித்து பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட ஆணையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன் மூலம் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.