உள்ளூர் செய்திகள்
வழக்கு

வாலிபரை ஜாமீனில் எடுக்க போலி ஆவணம் கொடுத்த 2 பெண்கள் மீது வழக்கு

Published On 2022-04-28 09:19 IST   |   Update On 2022-04-28 09:19:00 IST
கொடுமுடி இன்ஸ்பெக்டர் முருகன், போலி ஆவணம் கொடுத்த 2 பெண்கள் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.
கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வருந்தியா பாளையம் என்ற பகுதியில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் திருப்பூரை சேர்ந்த ஜெகநாதன் (30) என்பவரை கொடுமுடி போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஜெகநாதனை ஜாமினில் கொண்டு வர திருப்பூர் செட்டிபாளையம் முத்துநகரை சேர்ந்த சேகர் என்பவரது மனைவி முத்துமாரி, அதே பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரது மனைவி அலமேலு ஆகியோர் கொடுமுடி கோர்ட்டில் மனு செய்தனர்.

இதற்காக அவர்கள் 2 பேரும் ஆதார் அட்டை, ரேசன் கார்டு, வீட்டு வரி ரசீது, மற்றும் ஜாமீன் சான்று ஆகியவற்றை தயார் செய்து கொடுமுடி கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

அந்த ஆவணங்களை கோர்ட்டு ஊழியர்கள் சரி பார்த்தனர். அப்போது பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டது. குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், திருப்பூர் வடக்கு தாசில்தார் ஆகியோர் கையெழுத்துகளில் சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவர்கள் கொடுத்த முகவரி சான்றிதழிலும் முரண்பாடாக இருந்தது.

இதுப்பற்றி விசாரணை நடத்தி உண்மை தன்மையை அறிய கொடுமுடி கோர்ட்டு தலைமை எழுத்தர் பாக்கியம் என்பவர் கொடுமுடி போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் வாலிபரை ஜாமீனில் எடுக்க முத்துமாரி, அலமேலு ஆகியோர் கொடுத்து ஆவணங்கள் போலியானவை என்று தெரியவந்தது.

இதையடுத்து கொடுமுடி இன்ஸ்பெக்டர் முருகன், போலி ஆவணம் கொடுத்த 2 பெண்கள் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

மேலும் தனிப்படை போலீசார் இன்று திருப்பூர் சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Similar News