உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மே மாதம் பால் நிறுத்த போராட்டத்தை நடத்த முடிவு

Published On 2022-04-26 14:43 IST   |   Update On 2022-04-26 14:43:00 IST
பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி மே மாதம் பால் நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி மே மாதம் பால் நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் ஏ.எம்.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-
பாலுக்கு கொள்முதல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி, பசும்பாலுக்கு 42 ரூபாய், எருமை பாலுக்கு 51 ரூபாய் என அறிவிக்க வேண்டும். கடந்த 2019&ல் அப்போதைய அரசு பால் கொள்முதல் விலையை அறிவித்தது.

அதன்பின் கொள்முதல் விலை உயர்த்தவில்லை. ஆனால் ஆவின் தீவனம் 50 கிலோ மூட்டை 840&ல் இருந்து 1,040 ரூபாயானது. இதர தீவனங்கள் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. தனியார் பால் கொள்முதல் நிறுவனங் கள் லிட்டருக்கு 5 ரூபாய் கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்கிறது.

பாலுக்கு கொள்முதல் விலையை 10 ரூபாய் உயர்த்தாவிட்டால் ஆவின் பால் கொள்முதல் உயராது. தமிழகத்தில் தினமும் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகும் நிலையில் ஒரு கோடி லிட்டர் அளவு ஆவின் கொள்முதல் செய்ய கட்டமைப்பை ஏற்படுத்தி, வாங்க வேண்டும்.

ஆவின் பால் ஒரு லிட்டர் விற்பனைக்கு 1.57 ரூபாய் முதல் 3 ரூபாய் மட்டுமே கமிஷன் தருகிறது. 10 ஆண்டாக இத்தொகை உயரவில்லை. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பால் கறந்து பெறும் சொசை ட்டிகளிலேயே பாலின் அளவு, தரம், கொழுப்பு உள்ளிட்ட சத்துக்களின் அளவை குறித்து வழங்க வேண்டும்.

சத்துணவில் குழந்தை களுக்கு தினமும் ஆவின் பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  உரிய காலங்களில் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்த மே மாதம் பால் நிறுத்த போராட்டம் நடத்த திட்டமிட்டு, பிரசாரம் செய்கிறோம். போராட்ட தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Similar News