உள்ளூர் செய்திகள்
தக்காளியில் வாடல்நோயை தவிர்க்கும் வழிமுறைகள்- வேளாண்துறை விளக்கம்
வாடல் நோய் தாக்கிய தக்காளி செடியின் இளம் இலைகள் கருகி சில நாட்களில் இறந்துவிடும். இலைக்காம்பு மற்றும் அனைத்து இலைகளும் வாடத்துவங்கும்.
திருப்பூர்:
காய்கறி பயிர்களில் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் முக்கிய பொருளாக தக்காளி விளங்குகிறது.
கணிசமான விவசாயிகள் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தக்காளியில் ஏற்படும் நோய் பாதிப்பால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்படுகிறது. தக்காளியில் வாடல் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது.
இதுகுறித்து பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் கவிதா கூறியதாவது:-
வாடல் நோய் தாக்கிய தக்காளி செடியின் இளம் இலைகள் கருகி சில நாட்களில் இறந்துவிடும். இலைக்காம்பு மற்றும் அனைத்து இலைகளும் வாடத்துவங்கும். இளம் இலைகளின் கிளை நரம்புகள் வெளியே தெரியும்.
இலைக்காம்பு உதிரத் துவங்கும். இதன் தொடர்ச்சியாக மற்ற இலைகளுக்கும் நோய் பரவ ஆரம்பித்து தாவர வளர்ச்சி குன்றி பின் இறந்து விடும்.
இதை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழித்தல், பயிர் சுழற்சி முறையில் தானியங்களை பயிரிடுதல், ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் கார்பென்டஸிம் கலந்து பாதிக்கப்பட்ட வேர்ப்பகுதியில் ஊற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தக்காளியில் வாடல் நோய் கட்டுப்பாடு தொடர்பாக பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலையத்தை விவசாயிகள் தொடர்பு கொள்ளுமாறு திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் அறிவித்துள்ளார்.