உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

குடியாத்தத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

Published On 2022-04-13 15:48 IST   |   Update On 2022-04-13 15:48:00 IST
குடியாத்தத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து 8 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் பகுதியில் கடைகள், வீடுகள் முன்பு நிறுத்தி வைக்கும் பைக்குகளை திருடி செல்கின்றனர். இது சம்பந்தமாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் பைக் திருட்டு கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி செதுகரை பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது பைக்கை திருடிச் சென்றனர். இது குறித்து அவர் குடியாத்தம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம கும்பலை தேடி வந்தனர். 

நேற்று காலையில் குடியாத்தம் அடுத்த லட்சுமணாபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். 

அப்போது அதில் ஒருவன் கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர் போலவே இருந்ததால்  போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் மொய்தீன் பேட்டை மசூதி அருகே பைக் திருடியது தெரியவந்தது.

அவர்கள் குடியாத்தம் அடுத்த மோர்தானா கிராமத்தைச் சேர்ந்த அம்பேத்கர் (வயது 30 ) வேன் டிரைவர் என்பதும், இவரது நண்பர்கள் கஸ்பா அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (24) கட்டிட தொழிலாளி, தன கொண்டபள்ளி பகுதியைச் சேர்ந்த விக்ரம்( 21) ஆட்டோ டிரைவர் என்பதும் இவர்கள் குடியாத்தம் பகுதியில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

பின்னர் அவர்களிடம் இருந்து 8 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது. மேலும் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News