உள்ளூர் செய்திகள்
வேலூர் லாங்கு பஜாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வேலூர் லாங்கு பஜாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
வேலூர்:
வேலூர் லாங்கு பஜாரில் நேதாஜி மார்க்கெட்டை ஒட்டியுள்ள பகுதியில் அதிகளவு நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் தினந்தோறும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பலர் வாகனங்களை லாங்கு பஜாரில் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
பஜார் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை லாங்கு பஜார் மார்க்கெட் பகுதியில் போலீசார் ஆக்கிரமிப்பு அகற்றினர். பஜாரில் வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி மற்றும் தரை கடைகளை அப்புறபடுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
இதனால் வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர்.
கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் எந்தவித காரணத்தைக் கொண்டும் நடைபாதையை ஆக்கிரமிக்க கூடாது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றிய பிறகு லாங்கு பஜார் பொதுமக்கள் வந்து செல்ல மிக எளிதாக இருந்தது. ஆனால் மார்க்கெட்டுக்கு வருபவர்கள் வண்டியை நிறுத்த இடமில்லாமல் திணறினர்.
லாங்கு பஜாரில் ஆக்கிரமிப்பு கடைகள் வைக்க அனுமதிக்கக் கூடாது. மார்க்கெட் பகுதிக்கு வரும் பொதுமக்கள் வசதிக்காக பிரத்தியேகமாக வாகன நிறுத்துமிடம் அமைத்துக் கொடுத்தால் அந்த பகுதியில் நிரந்தரமாக நெரிசலை தடுக்க முடியும்.
லாங்கு பஜாரில் அவ்வப்போது ஆக்கிரமிப்பு அகற்றுவதும் மீண்டும் அந்த இடத்தில் கடைகள் அமைப்பதும் வழக்கமான ஒன்று தான். இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.