உள்ளூர் செய்திகள்
ஆலோசனை கூட்டம்

சத்தியமங்கலத்தில் நாளை முழு கடையடைப்பு- காத்திருப்பு போராட்டம் நடத்தவும் முடிவு

Published On 2022-04-10 14:26 IST   |   Update On 2022-04-10 14:26:00 IST
கடந்த 2 நாட்களுக்கு முன்பு திம்பம் மலைப்பாதையில் 12 சக்கர டாரஸ் லாரிகளுக்கு நிரந்தர தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு வியாபாரிகள், லாரி உரிமையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சத்யமங்கலம்:

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் இரவு நேரம் மட்டும் கனரக வாகனங்களுக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், வியாபாரிகள், பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திம்பம் மலைப்பாதையில் 12 சக்கர டாரஸ் லாரிகளுக்கு நிரந்தர தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு வியாபாரிகள், லாரி உரிமையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள், வியாபாரிகள், அரசு பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. சத்தியமங்கலம் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சாலை வழியாக இரவு நேரம் வாகன போக்குவரத்துக்கு தடை மற்றும் கனரக சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் வணிகர் சங்கம் லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேர வாகனப் போக்கு வரத்தை தடை குறித்து கருத்து கேட்கப்பட்டது.

இதன்படி நாளை(திங்கட்கிழமை) சத்தியமங்கலம் பகுதி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது எனவும், ஈரோடு மாவட்டம் முழுவதும் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுவது எனவும், பண்ணாரி சோதனை சாவடியில் லாரி உரிமையாளர்கள், அனைத்து கட்சியினர் , வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப் பட்டது.

இதன்படி நாளை சத்தியமங்கலம் பகுதி முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்படுகிறது. நாளை முழு கடை அடைப்பு காரணமாக பல கோடி வர்த்தகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் சத்தியமங்கலம் சோதனை சாவடி அருகே நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதேப்போல் மாவட்டம் முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளது. இந்நிலையில் தாளவாடியில் விவசாய சங்க தலைவர் கண்ணையன், திம்பம் மலைப்பாதை போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் யுவபாரத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் விவசாயிகள் வணிகர்கள் வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். திம்பம் மலைப்பாதை தடையை முழுமையாக நீக்க வலியு றுத்தி சத்தியமங்கலத்தில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது . அதற்கு ஆதரவு தெரிவித்து தாளவாடி மலைப்பகுதி முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Similar News