உள்ளூர் செய்திகள்
கொலை

வில்லியனூரில் தலையில் கல்லைப் போட்டு முதியவர் படுகொலை

Published On 2022-04-08 06:13 GMT   |   Update On 2022-04-08 06:13 GMT
வில்லியனூரில் தலையில் கல்லைப் போட்டு முதியவர் படுகொலை செய்யப்பட்டார்.

சேதராப்பட்டு:

வில்லியனூர் பைபாஸ் சாலையில் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிஅருகே பரத் என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

நேற்று வியாபாரம் முடிந்தது பரத் பிரியாணிகடையை மூடிவிட்டு சென்றார். இன்று காலை பிரியாணிகடை முன்பு ஒரு முதியவர் தலை நசுங்கி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் இது பற்றி வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமு சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட முதியவருக்கு சுமார் 65 வயது மேல் இருக்கும் அவரது உடல் அருகே ஒரு பையில் 3 துணிகள் இருந்தன. 3 ஒற்றை செருப்புகள் அருகே கிடந்தது. அவர் யார்-எந்த ஊர் என்பது தெரியவில்லை.

நள்ளிரவில் அந்த முதியவர் பிரியாணி கடை முன்பு படுத்து இருந்த போது குடிபோதையில் மர்ம நபர்கள் அருகில் கிடந்த கருங்கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் மர்ம நபர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபடுட்டு இருக்கலாம் என தெரிகிறது.

இதை தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிகாமம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்ட முதியவர் யார்-எந்த ஊர் மற்றும் அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயை வரவழைத்து தடயங்களை பதிவு செய்து வருகிறார்கள்

இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News