உள்ளூர் செய்திகள்
மூதாட்டியிடம் நூதனமாக பேசி 3 பவுன் நகை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் மஞ்சனபேச்சி என்ற பொம்மி (வயது 68). இவருக்கு சில மாதங்களாக தீராத மூட்டுவலி இருந்தது. சம்பவத்தன்று அவர் வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் மூதாட்டியிடம், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையில் உள்ள சித்தரை சந்தித்து சிகிச்சை பெற்றால் மூட்டு வலி குணமாகும் என கூறியுள்ளார்.
இதனை நம்பிய மஞ்சன பேச்சி அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். காட்டுப்பகுதியில் நடந்து சென்றபோது அந்த பெண் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே நகையை கழற்றி தாருங்கள். பத்திரமாக வைத்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். மஞ்சனபேச்சியும் தான் அணிந்திருந்த 3 பவுன் நகையை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தார்.
இந்த நிலையில் அந்த பெண், சித்தர் தற்போது அங்கு இல்லை. எனவே வீட்டிற்கு செல்லுங்கள். சில நாட்களுக்கு பின் சென்று பார்ப்போம் என மஞ்சனபேச்சியிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மூதாட்டியை அந்த பெண் மினிபஸ்சில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்தார். மஞ்சனபேச்சி அந்த பெண்ணிடம் கொடுத்த நகை குறித்த விவரங்களை மறந்துவிட்டார். அந்த பெண்ணும் நகையை திருப்பித்தரவில்லை. எனவே திட்டமிட்டு அந்த பெண் நகையை திருடிச்சென்றதாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய பெண்ணை தேடி வருகின்றனர்.