உள்ளூர் செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை - பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டு கட்டி சரண கோஷத்துடன் தரிசனம் செய்வதால் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.
இங்கு கடந்த பிப்ரவரி மாதம் 27 ந் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி மார்ச் 8 ந் தேதி வரை பத்து நாட்கள் மாசிக்கொடை விழா நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் அதிகமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, பொங் கலிட்டு அம்மனை வழிபட் டனர். இதனைத் தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான நேற்று மீன பரணிக்கொடை விழா நடந்தது.
இதனையொட்டி காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு உருள் நேர்ச்சை, 5.30 மணிக்கு உத்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 8 மணிக்கு வில்லிசை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி,
பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தொடர்ந்து குத்தியோட்டம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடந்தது.
வலிய படுக்கை பூஜை வருடத்திற்கு மூன்று முறை நடைபெறும். அதாவது மாசித் திருவிழாவின் ஆறாம் நாள், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும், பரணி கொடைவிழா அன்றும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வலியபடுக்கை பூஜையில் அம்மனுக்கு பல்வேறு வகையான உணவு வகைகளும், பழ வகைகளும் படைக்கப்பட்டிருந்தது.
கோவில் மலர்களாலும் தீபங்களாலும் அலங்கரிக் கப்பட்டிருந்தது.விழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளாவிலிருந்தும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கியது.