கடலூர் அருகே சிலிண்டர் வெடித்து தொகுப்பு வீடு தரைமட்டம்
கடலூர்:
கடலூர் அருகே கலையூர் கிராமத்தை சேர்ந்தவர் திலகவதி (வயது 50). இவர் தானே புயலில் கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இன்று காலை வழக்கம் போல் திலகவதி கியாஸ் அடுப்பில் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென்று தீ மளமளவென பரவியது.
அதிர்ச்சி அடைந்த திலகவதி தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் திலகவதி அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்த போது திடீரென்று பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. அப்போது திலகவதிக்கு காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து தீ விபத்தில் வீட்டின் முன்பகுதி முழுவதும் தரைமட்டமாகி பொருட்கள் வெளியில் சிதறியது. இதனைதொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தன்ராஜ், தண்டபாணி, கதிரவன் ஏகாம்பரம், திவாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
காயமடைந்த திலகவதியை உடனடியாக மீட்டு தங்களது தீயணைப்புத் துறை வாகனத்தில் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.