உள்ளூர் செய்திகள்
தற்கொலை

சென்னை பெண் ஐ.டி. ஊழியர் தற்கொலை

Published On 2022-04-02 10:02 IST   |   Update On 2022-04-02 10:02:00 IST
திருமண நிச்சயம் நடக்க இருந்த நிலையில் சென்னை பெண் ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

கோவை ஆவாரம் பாளையம் சக்தி எஸ்டேட்டை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் கிருத்திகா (வயது 28). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்தார்.

கிருத்திகாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்தநிலையில் கிருத்திகாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்வது என முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்தனர். அதற்கு எந்தவித எதிர்ப்பு தெரிவிக்காமலும், தனது காதலை வீட்டில் சொல்லாமலும் பெற்றோர் பார்த்த திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி வருகிற 6-ந் தேதி இருவீட்டாரும் திருமணம் நிச்சயம் செய்வது என முடிவு செய்தனர்.

முதலில் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்த கிருத்திகா திடீரென தனது பெற்றோரிடம் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், வேறு ஒரு வாலிபரை காதலிப்பதாகவும் தெரிவித்தார்.

இதை கேட்டதும் அதிர்ச்சியான பெற்றோர் முதலிலேயே தெரிவித்து இருந்தால் நாங்கள் மாப்பிள்ளை பார்த்து இருக்க மாட்டோம் என்றும், இப்போது அவர்களிடம் எப்படி பேசுவது எனவும் தெரிவித்தனர்.

இதனால் கடந்த சில நாட்களாக கிருத்திகா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட கிருத்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News