உள்ளூர் செய்திகள்
தற்கொலை

ஆபாச வீடியோ எடுத்து வாலிபர் மிரட்டல்- கடிதம் எழுதி வைத்து கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2022-03-30 12:37 IST   |   Update On 2022-03-30 12:37:00 IST
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆபாச வீடியோ எடுத்து வாலிபர் மிரட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மகள் அஜினா தேவி (வயது 21). சிதம்பரம் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இன்று காலை அஜினா தேவி கல்லூரிக்கு செல்லவில்லை. ஆனால் வீட்டில் இருந்தார். அப்போது கிருஷ்ணன், அவரது மனைவி வெளியே சென்ற சமயத்தில் வீட்டை பூட்டிய அஜினா தேவி திடீர் என தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

சிறிது நேரம் கழித்து கிருஷ்ணன் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவை தட்டிப்பார்த்த போது நீண்ட நேரம் கதவு திறக்கப்படவில்லை. பதறி போன அவர் ஜன்னல் வழியே எட்டி பார்த்தார். அப்போது அஜினா தேவி தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி உடனடியாக அண்ணாமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அஜினா தேவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அஜினா தேவி கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் குளிக்கும் போது தன்னை ஒருவர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்தார். அதனால்தான் தற்கொலை செய்கிறேன் என்று கூறப்பட்டு இருந்தது.

போலீசார் வழக்குபதிவு செய்து அஜினா தேவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News