உள்ளூர் செய்திகள்
கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் ரகு.

கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்

Published On 2022-03-29 13:26 IST   |   Update On 2022-03-29 13:26:00 IST
நாகை அருகே மீன் பிடித்தபோது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
நாகப்பட்டினம்:

நாகூர் பட்டிணச்சேரியை சேர்ந்த மவின்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகூர் பட்டிணச்சேரியை சேர்ந்த ரகு உள்பட 12 மீனவர்கள் கடந்த 20-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தொடர்ந்து  தங்கி மீன் பிடித்தனர். 26-ந் தேதி நாகைக்கு வடகிழக்கே 118 கிலோமீட்டர் தொலைவிலும் கடலூருக்கு கிழக்கே 58 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மீனவர் ரகு எதிர்பாராதவிதமாக படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்தார். அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் சிலர் உடனே கடலில் குதித்து ரகுவை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.  இதையடுத்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் இது குறித்து இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கடலோர போலீசார் கடலில் ரகுவை தேடி வருகின்றனர். 2 நாட்களாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை ரகுவை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் என்ன ஆனார்? என்ற விவரம் தெரியாததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழந்துள்ளனர்.

இது குறித்து கரை திரும்பிய சக மீனவர்கள் கூறும்போது:

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது கடல் சீற்றம் காரணமாக ரகு படகிலிருந்து தவறி விழுந்தார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கோஸ்ட்காட் மூலமாகவும் தேடும் பணி தொடர்கிறது என்றனர். மாயமான மீனவர் ரகுவிற்கு மனைவியும், 3 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

Similar News