உள்ளூர் செய்திகள்
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்- கடலூர் மாவட்டத்தில் ரூ. 200 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு

Published On 2022-03-28 16:57 IST   |   Update On 2022-03-28 16:57:00 IST
வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கடலூர் பாரதி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் யாரும் பணிக்கு செல்லவில்லை.

இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பழைய வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. ஒரு சில வங்கிகள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் செயல்பட்டது. இந்த நிலையில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கடலூர் பாரதி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வங்கி ஊழியர் சங்கத்தின் கடலூர் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் கூறுகையில், மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்பட 210 கிளை வங்கிகளில் பணியாற்றி வரும் 400-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை என மொத்தம் ரூ.200 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

நாளை (செவ்வாய் க்கிழமை) 2வது நாளாக வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுமட்டுமன்றி அரசு ஊழியர்கள், பென்‌ஷன் வாங்கும் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு சம்பளம் போடும் பணி பாதிக்கப்படும் என ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Similar News