உள்ளூர் செய்திகள்
எலி மருந்தில் பல்துலக்கிய முதியவர் பலி
பற்பசை என நினைத்து எலி மருந்தில் பல்துலக்கிய முதியவர் பலியானார்.
புதுச்சேரி:
புதுவை தட்டாஞ்சாவடி நவசக்திநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சம்பந்தம் (வயது75). தச்சு வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரத்தினம்மாள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
மனைவி மீது பாசம் கொண்ட சம்பந்தம் திடீரென மனைவி இறந்ததால் துக்கத்தை மறக்க மது குடிக்க தொடங்கினார். பின்னர் அவர் மது போதைக்கு அடிமையானார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சம்பந்தம் குடிபோதையில் பற்பசை என்று நினைத்து எலி மருந்தில் பல் துலக்கினார். பின்பு இதுபற்றி தெரியவரவே சம்பந்தம் இதுகுறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தார். உடனே அவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிததும் பலனின்றி சம்பந்தம் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.