உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள்

வேனில் கடத்தி வந்த 2¾ டன் ரேசன் அரிசி பறிமுதல்- 3 பேர் கைது

Published On 2022-03-23 16:09 IST   |   Update On 2022-03-23 16:09:00 IST
வேனில் கடத்தி வந்த 2¾ டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் மதுரையை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ரேசன் அரிசி கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. கடத்தல்காரர்கள் ரேசன் அரிசியை கள்ளச்சந்தையில் வாங்கி அதனை ஆலைக்கு அனுப்பி பாலிஸ் செய்து வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கிறார்கள்.

சில நேரங்களில் ரேசன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. ரேசன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து, வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு காரியாபட்டி-மதுரை ரோட்டில் உள்ள மல்லாங்கிணறு-வலையங்குளம் சந்திப்பில் உணவு கடத்தல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்வின்பிரைட் மேரி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வேனை மறித்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மினி வேனை சோதனை செய்தபோது 63 மூட்டைகளில் 2 ஆயிரத்து 835 கிலோ ரேசன் அரிசி (சுமார் 2¾ டன்) மதுரைக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மினி வேன், அரிசியை பறிமுதல் செய்தனர். வேனில் இருந்த 3 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்ததில், அவர்கள் மதுரை காமராஜர் தெருவை சேர்ந்த பாண்டி (24), ஆறுமுகம் (32), முனீஸ்வரன் (23) என தெரிய வந்தது. இவர்கள் அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் ரேசன் அரிசியை கள்ளச்சந்தையில் வாங்கி மதுரையில் உள்ள ஆலைக்கு கடத்தி வந்துள்ளதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.


Similar News