உள்ளூர் செய்திகள்
பேக்கரி கடையில் தீ

உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்து: பேக்கரி- கடை தீயில் எரிந்து நாசம்

Published On 2022-03-23 10:22 IST   |   Update On 2022-03-23 10:22:00 IST
உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் பேக்கரி-கடை தீயில் எரிந்து நாசமானது. இங்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உளுந்தூர்பேட்டை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பஸ் நிலையம் எதிரே வணிக வளாகம் உள்ளது. அங்கு அய்யங்கார் பேக்கரி மற்றும் கடை அமைந்துள்ளது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.

இன்று காலை 7 மணி அளவில் பேக்கரியில் இருந்து திடீரென புகை வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. இதனால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது.

அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடிய வில்லை.

இதுபற்றி உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்கரவர்த்தி தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

என்றாலும் பேக்கரி மற்றும் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இங்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

Similar News