உள்ளூர் செய்திகள்
வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்

பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-03-21 10:46 GMT   |   Update On 2022-03-21 10:46 GMT
வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
வத்திராயிருப்பு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந் துள்ளது. அடர்ந்த காடுகளை கொண்ட மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் யானை, புலி, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. 

வத்திராயிருப்பை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி புலிகள் அதிகம் உள்ள பகுதி என கண்டறியப்பட்டு கடந்தவருடம் இந்த பகுதியை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயம் என்ற புதிய சரணாலயத்தை மத்திய, மாநில அரசுகள் அமைத்துள்ளது.

இந்த பகுதிகளை சுற்றியுள்ள மலை அடிவார கிராமப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான கிடை மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த கிடை மாடுகளை மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில்தான் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்கள்.
 
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை யுனெஸ்கோ அமைப்பு  பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவித்து உள்ளதாலும்,  இந்தப் பகுதியில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளதாலும் மேய்ச்சலுக்கு கிடை மாடுகளை வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்லக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. 

ஐகோர்ட்டு உத்தரவை மீறி வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் மலைப்பகுதியில் மலை மாடுகளை மேய்ச்சலுக்காக  அழைத்துச்சென்ற அலியார், லிங்கேஸ்வரன், அம்மாசி, அங்கப்பன், பாண்டி, சுப்பையா ஆகிய  6 பேரை எஸ்.கொடிக்குளம் வனத்துறையினர் கைது செய்து வனத்துறை அலு வலகத்தில் வைத்திருந்தனர். 

இதனை அறிந்த உறவினர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பொது மக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி எஸ்.கொடிக்குளம் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

மலை மாடுகளை நம்பியே தங்களது வாழ்வாதாரம் இருப்பதாகவும், உடனே தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மேலும் கைது செய்யப் பட்டவர்களை எந்தவித வழக்கும் இன்றி உடனே விடுவிக்க வேண்டுமென கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் பாலாஜி, வனச்சரக அலுவலர் செல்லமணி, கூமாப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதையடுத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் அனுமதி இன்றி வனப்பகுதிக்குள் மேய்ச் சலுக்கு சென்றதற்காக 6 பேருக்கும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து விடுவித்தனர்.  வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
Tags:    

Similar News