உள்ளூர் செய்திகள்
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய வனத்துறையினர்-தன்னார்வலர்கள்
ஆசனூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினர்-தன்னார்வலர்கள் -அலுவலர்கள் அகற்றினர்.
தாளவாடி:
ஆசனூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினர்-தன்னார்வலர்கள் -அலுவலர்கள் அகற்றினர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்-பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
திம்பம் முதல் தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் வரை இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை சாலையோரத்தில் வீசி செல்வது தொடர்கதையாகி வருகிறது.
இதனால் வனவிலங்குகள் அதை உண்ணும் போது உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் ஆசனூர் மாவட்ட வன அலுவலர் மற்றும் வனச்சரகர் சிவகுமார் தலைமையில் தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் காலை திம்பம் முதல் காரப்பள்ளம் வரை சாலை ஓரத்தில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றினர்.
பின்னர் வாகன ஓட்டிகளிடம் வனச் சாலையில் செல்லும்போது குப்பைகளை வீச வேண்டாம் எனவும் வாகனத்தில் மெதுவாக செல்லுமாறும் வனத்துறை சார்பில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.