உள்ளூர் செய்திகள்
மின்வாரிய அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விவசாயிகளிடம் மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட மின் வாரிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னிமலையில் விவசாய சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னிமலை:
விவசாயிகளிடம் மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட மின் வாரிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னிமலையில் விவசாய சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அ.செ.கந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் கலைச்செல்வி ஜிதேந்திரன், அம்மாபாளையம்- பசுவபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தங்கராஜ், பசுவபட்டி ஊராட்சி தலைவர் எம்.சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் எஸ்.பொன்னுசாமி வரவேற்றார். கோரிக்கைகள் குறித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில செயற்குழு உறுப்பினர் கி.வே.பொன்னையன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முத்துசாமி, சி.எம்.துளசிமணி, சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமை யாளர்கள் சங்க தலைவர் பொன்.ஈஸ்வரமூர்த்தி, ஏ.ஐ.டி.யு.சி மாநில செயலாளர் எஸ்.சின்னுசாமி மற்றும் கே.ஆர்.தங்கராஜ் (கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு), கே.ரவி (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), அ.செல்வராசு (புரட்சிகர இளைஞர் முன்னணி) உள்பட பலர் கலந்து கொண்டு ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுத்தி பேசினார்கள்.
பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. மும்முனை மின்சாரம் வேண்டி விண்ணப்பம் கொடுத்து விட்டு நீண்ட காலம் தவியாய் தவிக்கும் விவசாயிகளின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
இந்த சிறப்புமிகு திட்டத்தை சீர்குலைக்கும் மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் வருவாய்துறையில் வாரிசு சான்றிதழ், பட்டா வழங்குதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கும் அதிகாரிகள் பணம் பெறுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால் இது போன்ற ஊழல்களை எதிர்த்து மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பனியம்பள்ளி முன்னாள் ஊராட்சி தலைவர் பி.சிவக்குமார், அனைத்து வணிகர் சங்கங்களின் மாவட்ட தலைவர் ஆர்.கே.சண்முகவேல், செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் உதயம் செல்வம், சென்னிமலை நிர்வாகிகள் ஏ.ரமேஷ், எம்.ஏ.அன்பழகன், ஈஸ்வரன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மு.பாரதி நன்றி கூறினார்.