உள்ளூர் செய்திகள்
வீட்டில் ரேசன் அரிசி பதுக்கிவைத்த வியாபாரி கைது
வீட்டில் ரேசன் அரிசி பதுக்கிவைத்த வியாபாரியை கைது செய்தனர்.
அரியலூர்:
தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் இயக்குனர் மற்றும் மதுரை மண்டல சூப்பிரண்டின் அறிவுறுத்தலின்படி, திருச்சி உட்கோட்ட துணை சூப்பிரண்டு மற்றும் திருச்சியை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில்,
அரியலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் கீழப்பழுவூர், திருமானூர் ஆகிய பகுதிகளில் குடிமைப்பொருட்கள் கடத்தல், பதுக்கல் ஆகியவை தொடர்பான குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதில் திருமழபாடியை சேர்ந்த துரைராஜ் (வயது 60) என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், துரைராஜ் அரிசி, எண்ணெய் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த சுமார் 1,250 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் துரைராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.