உள்ளூர் செய்திகள்
வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து தலைவர்-கவுன்சிலர்கள் வெளிநடப்பு
கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கொடுமுடி:
கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கொடுமுடி ஊராட்சி ஒன்றிய குழுவின் அவசரக் கூட்டம் இன்று கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுமித்ரா (பொது), வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மனாபன் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலையில், ஒன்றிய குழுத்தலைவர் லட்சுமி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தீர்மானங்கள் மன்ற அங்கீகாரம் பெறுவதற்காக படிக்கப்பட்டன.
யூனியன் செலவினங்கள் குறித்து படிக்கப்பட்ட போது அதற்கான ஆவணங்களை மன்றத்தில் காட்டச் சொல்லி 1-வது வார்டு கவுன்சிலர் தீ.பழனிசாமி ஒன்றிய குழுத்தலைவர் மூலமாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுமித்ராவிடம் (பொது) கோரிக்கை வைத்தனர்.
அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலரின் ஒப்புதல் கையொப்பம் இல்லாத ஜெராக்ஸ் பேப்பர் கொடுக்கப்பட்டது.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரின் கையொப்பம் உள்ளதை காட்டுங்கள் என்ற கோரிக்கையை உறுப்பினர்கள் வைத்தனர்.
அதற்கு அவர் எனது மேலதிகாரிளுக்கு மட்டுமே எனது கையொப்பம் உள்ள ஆவணங்களை கொடு ப்பேன் என்று கூறினார்.
உடனே 1-வது வார்டு கவுன்சிலர் தீ.பழனிசாமி, 2-வது வார்டு கவுன்சிலர் எம்.ஏ.பழனிசாமி, 4-வது வார்டு கவுன்சிலர் பரமசிவம், 5-வது வார்டு கவுன்சிலர் வளர்மதி மற்றும் ஒன்றிய குழுத்தலைவர் லட்சுமி ராஜேந்திரன் ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார்.
ஒன்றிய குழு துணைத்தலைவர் ப்ரீத்தி செந்தில் மட்டும் கூட்ட அரங்கின் உள்ளே இருந்தார். இதனால் சிறிது நேரம் கூட்டரங்கில் பரபரப்பு நிலவியது.