உள்ளூர் செய்திகள்
மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும்
கத்தரிப்புலத்தில் மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கத்தரிப்புலம் கிராமத்தில் கோவில் குத்தகை வடக்கில் உள்ள வடகாடு சாலை கடந்த பத்தாண்டு காலமாக மண் சாலையாக இருந்து வருகிறது.
இந்த சாலையில் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மழை காலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பல விபத்துகளுக்கு ஆளாகி வருகிறார்கள். பலமுறை அரசுக்கு இந்த சாலையை சீரமைத்து வடிகால் வசதி செய்து தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு மேற்படி சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் ஒன்றியக்குழு தலைவருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.