உள்ளூர் செய்திகள்
பெருந்துறை அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறையை அடுத்துள்ள மணியம் பாளையம் குட்டைய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 56). விவசாயியான இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவர் தினமும் அதிகாலை பெருந்துறை தினசரி மார்க்கெட்டுக்கு வருவது வழக்கம். அதே போல் இன்று அதிகாலை 2 மணியளவில் பெருந்துறை மார்க்கெட்டுக்கு வருவதற்காக தனது மொபட்டில் பெருந்துறை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
ஓலப்பாளையம் பிரிவு தேசிய நெடுஞ்சாலை அருகே வந்த போது ரோட்டை கடக்க முயன்றார். அப்பொழுது சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற ஒரு கார் எதிர்பாராதவிதமாக சாமியப்பன் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் காலில் பலத்த அடிபட்ட சாமியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.