உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய கும்பல்

Published On 2022-03-10 14:13 IST   |   Update On 2022-03-10 14:13:00 IST
கனகசெட்டிக்குளத்தில் பெட்ரோல் போட பண தர மறுத்ததால் போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

வானூர் அருகே புதூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ் குமார் (வயது33). இவர் கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் கீழ்புத்துப்பட்டு பகுதியில் ரோந்து பணி சென்று விட்டு கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப வந்தார்.

அப்போது அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தங்களது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப பணம் தருமாறு போலீஸ்காரர் சதீஷ் குமாரிடம் கேட்டனர். அதற்கு சதீஷ்குமார் உங்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப நான் ஏன் பணம் தரவேண்டும் என கூறி பணம் தர மறுத்து விட்டார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் போலீஸ்காரர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். மேலும் கண்டம் துண்டமாக வெட்டி கடலில் வீசி விடுவோம் என்று சதீஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது-.

இதுகுறித்து சதீஷ்குமார் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து போலீஸ்காரர் சதீஷ்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News