உள்ளூர் செய்திகள்
விபத்து

சென்னை மாநகர பஸ் கண்டக்டர்கள் 2 பேர் லாரி மோதி பரிதாப பலி

Published On 2022-03-10 07:44 GMT   |   Update On 2022-03-10 07:44 GMT
செங்கல்பட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி மோதிய விபத்தில் சென்னை மாநகர பஸ் கண்டக்டர்கள் 2 பேர் பலியாயினர்.
செங்கல்பட்டு:

மதுராந்தகம் அடுத்த தச்சூர், சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நந்த கோபன் (வயது51). இவர் ஆலந்தூர் பணிமனையில் மாநகர பஸ் கண்டக்டராக வேலைபார்த்து வந்தார்.

இவரது நண்பரான திருக்கழுக்குன்றம் அடுத்த எடையூர் நெரப்பாக்கத்தை சேர்ந்த ஜோதிபிரகாஷ்(45) என்பவரும், சென்னை மாநகர பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்தார்.

இன்று அதிகாலை 4 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் இருவரும் வேலைக்காக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். செங்கல்பட்டு ராட்டின கிணறு மேம்பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் மீது திடீரென லாரி மோதியது.

இதில் நந்தகோபனும், ஜோதி பிரகாசும் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். விபத்து குறித்து அறிந்ததும், செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பலியான 2 பேரில் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன நந்தகோபனுக்கு கோகிலா என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர்.

ஜோதிபிரகாசுக்கு சரளா என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். பணிக்கு சென்றபோது நண்பர்கள் இருவரும் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News